'கொள்கலன் விவகாரத்தை திட்டமிட்டு ஜனாதிபதி அநுர மறைக்கின்றார்" : அதிரடி குற்றச்சாட்டு

 
 
சுங்கத்திலிருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். அதனாலே ஊழல் இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது ஜனாதிபதி இலங்கை சுங்கத்தை தெரிவிக்காமல் விட்டார். சுங்கம் நிதி அமைச்சின் கீழ் இருப்பதால் ஜனாதிபதி திட்டமிட்டே அதனை மறைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை.

மாறாக சுங்க தொழிற்சங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது.

ஆனால் சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்கு பின்னர் சுங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்களை விடுவிப்பில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அதுதொடர்பில் மேலிடத்தில் இருந்து யாரும் அறிவிக்கவில்லை என்றும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பட்டியலையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த அதிகாரிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களே, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள் என்றார்.